Monday, May 24, 2010

புயல்களுக்கு பெயர்வைக்கும் முறை எப்படி வந்தது?

1970ல் ஜெனிவாவில் நடைபெற்ற மாநாட்டின்போது, பசிபிக் பெருங்கடலில்
உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும்படி அந்த பகுதியை சேர்ந்த நாடுகளை
உலக வானிலை அமைப்பு முதல் முறையாக கேட்டுக் கொண்டது. அதேபோல், வடக்கு
இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும்படி, 2000ல்
நடைபெற்ற உலக வானிலை அமைப்பு & ஆசிய, பசிபிக் நாடுகளுக்கான ஐக்கிய சபை
பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் மாநாட்டில் இந்த பகுதியில் அமைந்துள்ள
நாடுகள் கேட்டுக் கொள்ளப்பட்டன. அதன்படி, வடக்கு இந்திய பெருங்கடல்
பகுதியில் அமைந்துள்ள இந்தியா, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஓமன்,
பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய 8 நாடுகளும் சேர்ந்து 64 பெயர்களை
கொண்ட பட்டியலை தயாரித்தன. வடக்கு இந்திய பெருங்கடலில் உருவாகும்
புயல்களுக்கு இந்த பட்டியலில் இருந்து ஒவ்வொரு பெயராக வைக்கப்பட்டு
வருகின்றன. ஒருமுறை ஒரு நாடு தேர்வு செய்த பெயர் வைக்கப்பட்டால், அடுத்த
முறை வேறு நாடு தேர்வு செய்த பெயரில் புயல் அழைக்கப்படுகிறது. இதுபோல், 8
நாடுகளின் பெயர்களும் சுழற்சி முறையில் வைக்கப்படுகின்றன. அதன்படி,
நேற்று கரை கடந்த புயலுக்கு பாகிஸ்தானின் 'லைலா' பெயர் வைக்கப்பட்டது.
இதற்கு முன்பாக, ஓமன் பரிந்துரை செய்த பெயரான 'வார்டு' வைக்கப்பட்டது.
புயல் உருவாகி கரை கடந்ததும், பட்டியலில் இருந்து அந்த பெயர்
நீக்கப்படுகிறது. பிறகு, அந்த நாட்டின் சார்பில் புதிய பெயர் பரிந்துரை
செய்யப்படுகிறது.

கடைசியாக, 8 நாடுகளின் சார்பில் புயல்களுக்கு வைக்கப்பட்ட பெயர்களின்
விவரம் வருமாறு: நர்கீஸ் (பாகிஸ்தான்), ரஷ்மி (இலங்கை), காய்&முக்
(தாய்லாந்து), நிஷா (வங்கதேசம்), பிஜ்லி (இந்தியா), அய்லா (மாலத்தீவு),
பியான் (மியான்மர்), வார்டு (ஓமன்).



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

No comments:

Post a Comment