Saturday, May 15, 2010

சுரேஷை உங்களுக்குத் தெரியுமா?

சுரேஷை உங்களுக்குத் தெரியுமா?




சுரேஷ் ஈழத்திலிருந்து ஒன்பதாவது அகவையில் ஏதிலியாக கனடா வந்தவர். பள்ளியில் படித்த காலத்தில் காலத்தில் அவர் ஒரு கெட்டிக்கார மாணவன் என்று பெயர் எடுத்ததோடு சமூக அக்கறை கொண்ட மாணவனாகவும் விளங்கினார். இவரின் அறிவுக்கும் திறமைக்கும் ஏற்றாற்போல் பதின்மவயது பதினாறிலேயே புகழ்பெற்ற IBM நிறுவனத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டார். தன் உயர்பள்ளி நாட்களில் பன்னாட்டு மாணவர் வேலைத்திட்டங்களின் கீழ் (International Co-op Program) வெளி நாடுகளுக்குச்சென்று உலக அனுபவங்களைப் பெற்றுக்கொண்டார். இவரது அறிவுத்தேடலும் அயராத முயற்சியும் இவரைத் தனது பதினெட்டாவது அகவையிலேயே ஓர் கணனி நிறுவனத்திற்குச் சொந்தக்காரராக்கியது. சுரேஷ் 2006ஆம் ஆண்டு Waterloo பலகலைக்கழகத்தில் இலத்திரனியல் பொறியியல் துறையில் (Electrical Engineering) இளமானிப் பட்டத்தையும், 2008 இல் கலைத்துறையில் இளமானிப் பட்டத்தையும் (Bachelor of Arts), Waterloo Wilfred Laurier பல்கலைக் கழகத்தில் வணிக முகாமைத்துவ முதுமானிப் பட்டத்தையும் (MBA) பெற்றார். பின்னர் Microsoft, Amazon, NVDIA, RIM போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களில் பணிபுரிந்தார். இவர் பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற காலங்களில் Microsoft நிறுவனத்திற்காக மாணவர்களை தெரிவு செய்யும் பொறுப்பும், பணியும் கூட இவரிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது.
 
2004ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஈழம் செல்லும் வாய்ப்பு சுரேஷிற்கு கிட்டியது. அங்கு போரினால் ஏதிலிகளாக்கப்பட்ட சிறுவர், சிறுமிகளின் வலிகளை செந்தளிர் இல்லத்தில் கண்கூடாகக் கண்டார். அந்தக் காட்சிகள் அவர் மனதை மிகவும் பாதித்தது. மேலைநாடுகளுக்கு நிகரான அறிவாற்றலோடு ஈழத்தமிழ் சமுதாயமும் வளர தன்னாலான உதவிகளை செய்ய வேண்டுமென்று உறுதி பூண்டார். வன்னியிலுள்ள Vanni Tek என்ற நிறுவனத்திற்கு தன் துறைசார் அறிவையும், கணணிகளையும் தந்துதவினார். சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் உற்பத்திசெய்யும் (Solar Panel System) முறைக்கு தன்னாலான உதவியை செய்தார். மீண்டும், 2004வது ஆண்டு மார்கழியில் தாயகம் சென்றவேளையில் பல ஆயிரம் உயிர்களை பலிகொண்ட ஆழிப்பேரலையின் அனர்த்தங்கள் அவருக்கு நேரடி அனுபவமானது. தான் மிகவும் நேசித்த செந்தளிர் இல்லச் சிறார்கள் பலரின் உயிரற்ற உடல்கள் அவரது மனதை மிகவும் பாதித்தது. ஈழத்தில் ஆழிப்பேரலை ஏற்படுத்திய பொருள் அழிவுகள் அத்தனையையும் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டுமென்ற நோக்கத்தோடு இங்கு வந்து ஈழத்தில் பொதுமக்கள் படும் இன்னல்களை இங்குள்ள மாணவர்களுக்கு விளக்கி அவர்களை ஒன்றிணைத்தார்.

குற்றச்சாட்டு:
 
அந்தக்காலகட்டத்தில்தான் இவர் வாழ்வில் எதிர்பாராத ஓர் அதிர்ச்சி ஏற்பட்டது. 2006இல் செஞ்சோலை படுகொலை நிகழத்தப்பட்ட ஒருசில நாட்களில் 21. 08. 2006இல் அமெரிக்கப் புலனாய்வுத்துறையின் வேண்டுகோளுக்கு இணங்க கனேடிய காவல் துறையினர் தீவிரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் சுரேஷை கனடாவில் கைதுசெய்தார்கள். தடை செய்யப்பட்ட ஓர் தீவிரவாத அமைப்புக்கு (தமிழீழ விடுதலைப் புலிகள்) உதவினார் என்பதே அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டாகும். கூடவே, கணனி போன்ற உபகரணங்களை வாங்கிச்சென்று யாருக்கு வழங்கினார் என்பது தொடர்பாக அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 
கனடாவில் இவரது பிணை மனுவை விசாரணைக்கு எடுத்த நீதிபதி இவரது நன்னடத்தையையும் கல்வித்தகமைகளையும் கவனத்தில் கொண்டு இவரை பிணையில் வெளியே செல்ல அனுமதித்தார். பிணையில் வெளியே வந்த சுரேஷ் தன்னை அமெரிக்காவுக்கு அனுப்பப்படுவதை எதிர்த்து வழக்கை நடத்திக்கொண்டிருக்கிறார். சுரேஷ் அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்பட்டால், தடைசெய்யப்பட்ட ஓர் இயக்கத்திற்கு உதவினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் குறைந்தபட்சம் 25 ஆண்டுகால சிறைத்தண்டனை வழங்க அமெரிக்க சட்டத்தில் இடமிருக்கிறது. 
இவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருப்பதின் விளைவாக வேலைவாய்ப்புகள் ஏதுமின்றி பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கிறார். வழக்குச்செலவுகளை பல நெருக்கடிகளுக்கு மத்தியில் அவரது குடும்பமும் நல்ல உள்ளம் படைத்த சில நண்பர்களும் வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நெருக்கடியான சூழ்நிலைக்குள்ளும் தனது கல்வியை தொடர்ந்து தனது BA மற்றும் MBA பட்டப்படிப்பை 2008ம் ஆண்டு படித்து முடித்தார். அவர் பட்டப்படிப்பை தொடர்ந்த பல்கலைக்கழகம் அவரது திறமைக்கு மதிப்பு கொடுத்ததோடு இந்த ஆண்டு (2010) முதல் வணிகமுகாமைத்துவ மாணவர்களுக்கு (MBA Students) விரிவுரையாளராக கடமையாற்றும் பணியை வழங்கியுள்ளது.
பண உதவி:

இந்த வழக்கின் வெற்றி என்பது புலம்பெயர் நாடுகளில் ஈழத்தமிழ் சமூகத்தில் விதைக்கப்பட்டுள்ள அச்ச உணர்வை களைந்து புதியதோர் நம்பிக்கையை தரும் வெற்றியாக இருக்கும். அந்த வெற்றிக்கு உங்களின் அன்பான உதவியையும் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கிறோம். பண உதவி செய்ய விரும்புவோர் தயவுசெய்துwww.justiceforsuresh.org என்ற தொடர்பை அழுத்தி உதவுங்கள். அல்லது Pay Pal (Credit Card) மூலமாகவும் Certified Cheque மூலமாகவும் உதவலாம். கனடாவில் உள்ளவர்கள் விரும்பினால் Personal Cheque கொடுக்கலாம். உங்கள் காசோலைகளை அனுப்பவேண்டிய முகவரி,
Justice for Suresh
38064- 256 King St. North
Waterloo, On.
N2J 2Y9 Canada
Justice for Suresh என்ற அமைப்பினூடாக வழங்கப்படும் பண உதவி சட்டரீதியானது என்பதை உறுதிப்படுத்துகிறோம். இந்த வங்கிக்கணக்கை நிர்வகிக்க பல்கலைக்கழக பொறுப்பாளர் ஒருவரும் சமூக சேவையாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் மட்டுமே இப்பணத்தை கையாளமுடியும் என்பதையும் சுரேஷின் வழக்கைத் தவிர வேறெந்த தேவைகளுக்கும் இப்பணத்தை பாவிக்க முடியாது என்பதையும் உறதிப்படுத்த கடமைப்பட்டிருக்கிறோம். தாமதிக்காமல் உங்களால் முடிந்த பொருளாதார உதவிகளை செய்யுமாறு பணிவன்புடன் வேண்டுகிறோம் உறவுகளே!


சுரேஷிடம் நம் வாழ்த்துக்களை, நன்றிகளை, வணக்கங்களை  சொல்வோம். சுரேஷின் மின்னஞ்சல் முகவரி


No comments:

Post a Comment